நடா புயலானது வலுவிழந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. தற்போது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் மிதமானது முதல் சற்று பலத்த மழை பெய்யக் கூடும்.
வங்கக் கடலில் கடந்த புதன்கிழமை இரவு உருவான "நடா' புயல் கரை கடக்கும் முன்னர் கடலிலேயே வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. வலுவிழந்த நிலையில் நடா புயல், வெள்ளிக்கிழமை அதிகாலை 4 முதல் 5 மணிக்குள் காரைக்கால் அருகே கரையைக் கடந்தது.
இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 110 மி.மீ, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றத்தில் 60 மி.மீ., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 50 மி.மீ. மழையும் பதிவானது.
சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், விழுப்புரம், சிவகங்கை, திருச்சி, வேலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கோவை, கிருஷ்ணகிரி, தேனி, தருமபுரி, நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
நடா புயலானது தொடர்ந்து வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி காரைக்காலுக்குத் தெற்கே 15 கி.மீ. தொலைவில் கரையைக் கடந்தது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைபெய்யக் கூடும் என்று தெரிவித்தார்.
புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை: இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே டிசம்பர் 4-ஆம் தேதியளவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.