நாட்டிலேயே தமிழகத்தை சிறந்த பண்பாட்டு பிரதேசமாக மாற்றுவதற்கு பாடுபட்டவர் சூரியநாராயண ராவ் என மேகாலய ஆளுநர் புகழாரம் சூட்டினார்.
மறைந்த ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் கி.சூரியநாராயண ராவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மீனாட்சி கல்லூரி அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மேகாலய ஆளுநர் சண்முகநாதன் பங்கேற்றுப் பேசியதாவது:-
இங்குள்ள அனைவரும் மனதிலும் சோகம் இருக்கிறது. அதேபோல், என்னுடைய உள்ளத்திலும் ஆழ்ந்த வருத்தம் உள்ளது. அந்த அளவுக்கு சூரியநாராயண ராவ் தமிழகத்தில் இரண்டறக் கலந்தவர், இந்த மக்களின் உணர்வோடு சேர்ந்தவர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மிக உயர்ந்த வாழ்க்கையாகும். நான் 30 ஆண்டுகள் அருகில் இருந்து பார்த்தவன்.
மேலும், இந்து மக்களின் ஒற்றுமை என்பது, ஒருவருக்கு ஒருவர் நல்ல பரஸ்பரம், உதவி, அன்பு இருந்தால் போதும் என வலியுறுத்தியவர். என்னைப் பொருத்தவரையில் அவர் கருணையில் பேராறு. இந்த அளவுக்கு நல்லவரை, பெரியவரை நாம் இழந்துவிட்டோம் என்பதால்தான் எல்லாருடைய மனங்களில் சோகம் இருக்கிறது.
சேவை செய்வதே பரிகாரம்: இதற்கு ஒரே ஒரு பரிகாரம்தான் உள்ளது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 20 ஆயிரம் கிராமங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் உள்ளிட்ட இடங்களிலும் சூரியநாராயண ராவ் போல் சேவைப் பணியாற்ற தொண்டர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் சுயநலமற்ற எண்ணத்துடன் வாழ வேண்டும். அவர்கள் தன்னலமற்ற தியாகச் சீலர்களாகவும் இருக்க வேண்டும். இந்த ஆண்டில் நிறைய பிரசார சேவகர்களை உருவாக்க வேண்டும் என அவர் விரும்பினார்.
இந்தியாவிலேயே தமிழகத்தை ஒரு சிறந்த பண்பாட்டு பிரதேசமாக மாற்ற வேண்டும் என பாடுபட்டவர். அதனால் தலைசிறந்த சேவை ப்பணியாளர்களை உருவாக்கி அவருக்கு சமர்ப்பிப்போம். அவருக்கு சிரம் தாழ்த்தி மனப்பூர்வமான நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் குருமூர்த்தி, பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா, கோபிசெட்டிபாளையும் ஸ்ரீ வித்யாலயா தாளாளர் கீதா ரவீந்திரன், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.