சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துளளார்.
இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி முறை நிலவுகிறது. மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள வடக்கு சுமத்திரா தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
அதே போல அரபிக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால், ஈரப்பதம் மிகுந்த காற்று அரபிக் கடல் நோக்கி வீசுகிறது. இதனால் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதியில் இடைவெளிவிட்டு லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.