மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது என்று தெரிகிறது.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல் நிலை மோசமானதன் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். பலகட்ட தீவிர சிகிச்சைகள் காரணமாக, விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில், திடீரென்று நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆலோசனையின் பேரில் அவருக்கு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதய மற்றும் மூச்சுயியல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
தற்போது, சிகிச்சைகள் முடிந்து முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தேவைப்பட்டால் சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது. இது குறித்து அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர்.
விரைவில், முதல்வரின் உடல் நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் தெளிவான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.