பாதுகாப்புப் பணியில் 1.20 லட்சம் போலீஸார்

முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், தமிழகத்தில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக சுமார் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையை ஒட்டிய சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்.
அப்பல்லோ மருத்துவமனையை ஒட்டிய சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார்.

முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், தமிழகத்தில் அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக சுமார் 1.20 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சென்னைக்கு பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவ படை வீரர்கள் வந்துள்ளனர். அதேபோல சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்கு 2 ஐ.ஜி.கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடல் நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22- ஆம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவில் இருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே திங்கள்கிழமை அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்தது.
இதன் விளைவாக தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதற்கும், சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்கும் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் உடனடியாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பது தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக,. பொதுமக்களுக்குத் தேவையான பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பிரச்னையின்றி கிடைப்பதற்கும், அரசியல் தலைவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டன. மேலும் பதற்றமான இடங்களில் கூடுதலாக பாதுகாப்பு வழங்கும்படி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
அதேபோல ஒவ்வொரு காவல் நிலையத்திலும் முழு அளவில் காவலர் பணியில் இருக்கும்படியும், காவலர் முழு திறனுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறும் டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
சென்னையில்...: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆணையர்கள் பி.தாமரைக்கண்ணன், கே.சங்கர், ஸ்ரீதர்,ஷேசாயி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பைவிட, கூடுதலாகப் பாதுகாப்பு வழங்குவது, பிற பணிகளில் இருக்கும் காவலர்களை சட்டம்- ஒழுங்கு பணிக்கு உடனடியாக திருப்பி அழைப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதேபோல அரசு பேருந்து பணிமனை, பெட்ரோல் விற்பனையகங்கள், வங்கிகள்,
அரசு மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது எனவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
துணை ராணுவ படையினர்:சென்னையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கூடுதலாக 11 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படை வீரர்கள் சுமார் 2 ஆயிரம் சென்னைக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திங்கள்கிழமை இரவு முதல் அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரிலும், அவர் வீடு இருக்கும் பகுதியாக போயஸ் கார்டன் ஆகியவற்றில் இரு துணை ஆணையர்கள் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல நகரின் பல பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஆயுதப்படை வீரர்கள் பரங்கிமலை,எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளனர். இவர்கள் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால், அந்த இடத்துக்கு 5 நிமிஷத்துக்குள் செல்லும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று தீயணைப்பு படை வீரர்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
1.20 லட்சம் போலீஸார்:
மேலும் சென்னையில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணியை சீராக கவனிப்பதற்கு ஐ.ஜி.கள் சாரங்கன், எச்.எம். ஜெயராம் ஆகியோர் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இவர்கள், உடனடியாக சென்னை பெருநகர காவல்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், அதிவிரைவுப் படையினர், ஆயுதப்படையினர் என சுமார் 1.20 லட்சம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலைமை சீராகும் வரை காவலர்கள் தொடர்ந்து பணியில் இருக்குமாறு காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் விளைவாக காவலர்கள் தொடர்ந்து ஆங்காங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com