மூத்த பத்திரிகை ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமியின் மறைவுக்கு மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்திரிகை துறையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த சோ ராமசாமியின் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஒரு வழக்குரைஞராக, நாடக, திரைப்பட நடிகராக, எழுத்தாளராக, அரசியல் விமர்சகராக, மாநிலங்களவை உறுப்பினராக பல பரிமாணங்களில் ஆணித்தரமாகவும், ஆழமாகவும் பணிபுரிந்தவர். இந்தியத் திருநாட்டின் மேன்மை, அரசியல் நாகரிகம், அப்பழுக்கற்ற அரசியல் தூய்மை போன்ற விஷயங்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் சோ.
நெருக்கடி நிலையின்போது பிற பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் காங்கிரஸ் ஆட்சிக்கு அனுசரணையாக சென்ற போது, மகாகவி பாரதியின் எழுத்துச் சிந்தனைகளை "துக்ளக்' பத்திரிகையில் இடம் பெறச் செய்து இந்திய ஜனநாயகத்தில் எழுத்துப் போராட்டம் நடத்தியவர் சோ. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் உள்பட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களோடும், அகில இந்தியத் தலைவர்களோடும், பல முதல்வர்களோடும், அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு கொண்டிருந்தவர்.
தருண் விஜய் இரங்கல்: பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "எழுதுகோலும், தூரிகையும் பொய்புரட்டுக்கு எதிரான வலிமையான ஆயுதங்கள் என்பதை நிரூபித்துக் காட்டியவர் சோ ராமசாமி. அவர் உண்மைக்கான போராளியாகத் திகழ்ந்தவர். துணிச்சல் மிக்க இதழியலாளரான அவரது மறைவுச் செய்தியைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.