ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய தருணம்!

மாலையைச் சரி செய்ய ஜெயலலிதா டிரக்கில் ஏற, அடுத்த சலசலப்பு ஆரம்பமானது...
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய தருணம்!

ஜெ. ராம்கி எழுதிய ஜெயலலிதா - அம்மு முதல் அம்மா வரை (வெளியீடு - கிழக்கு பதிப்பகம்) என்கிற நூலிலிருந்து சில பகுதிகள்:

*

டிசம்பர் 24, 1987. வியாழக்கிழமை. அதிகாலை 5.30 மணி. ராமாவரம் தோட்டம்.

புழுதியைக் கிளப்பிக்கொண்டு காம்பவுண்டு வாசல் முன் வந்து நின்றது ஒரு வெள்ளை நிற கார். வாசல் கதவைத் திறக்கச் சொல்லி ஹாரன் அடித்தும் பிரயோஜனமில்லை. டிரைவர் இறங்கிச்சென்று வாசல் கதவைத் தட்டிப் பார்த்தார். பதிலில்லை. சட்டென்று கார் கதவைத் திறந்துகொண்டு கோபத்தோடு அந்தப்பெண் இறங்கினார். ஜெயலலிதா!

அழுது சிவந்த கண்கள். கோபம் முகத்தை இன்னும் கொஞ்சம் சிவக்க வைத்திருந்தது. ‘தலைவர் வீட்டுக்குள்ளே நான் வரத் தடை போட்டது யாரு?’ கேள்விக்குப் பதிலில்லை. நிசப்தம். சில நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு, அந்தப் பெரிய வாசல் கதவு திறந்தது. கிடுகிடுவென்று ஹாலுக்குள் நுழைந்து, லிஃப்ட்டை புறக்கணித்து, படிகளில் இரண்டு இரண்டாகத் தாவி, மூன்றாவது மாடிக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எம்.ஜி.ஆரின் அறைக் கதவு மூடப்பட்டிருந்தது. 

கதவைத் தட்டித் திறக்கச் சொன்னார்; முட்டி மோதினார்; கடைசியாக, கெஞ்சியும் பார்த்தார்.

கதவு திறக்கப்படவே இல்லை. சுற்றியிருந்த சொந்தங்கள், ஜெயலலிதாவைப் பார்த்து ஏதேதோ சொன்னார்கள். இரண்டு தரப்பிலும் வார்த்தைகள் பறந்தன. ஜெயலலிதாவுக்குக் கோபம் கோபமாக வந்தது. வெளியே காத்திருந்த கட்சிக்காரர்கள் எட்டிப் பார்த்தார்கள். பின்புறக் கதவு வழியாக எம்.ஜி.ஆர். உடலை ஆம்புலன்ஸில் அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்த ஜெயலலிதா, திரும்பவும் விறுவிறுவென்று அதே படிகளின் வழியாகக் கீழிறிங்கி வாசலுக்குப் போய் எம்.ஜி.ஆருக்காகக் காத்திருந்தார்.

காலை 6.00 மணி.

வெள்ளை நிற ஆம்புலன்ஸை உரசியபடி அதைப் பின் தொடரத் தயாராக ஜெயலலிதாவின் கார் நின்றுகொண்டிருந்தது. லிஃப்ட்டை உடைத்து, எம்.ஜி.ஆரின் உடலை நின்ற நிலையிலேயே தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். கதவு சாத்தப்பட்டது. எம்.ஜி.ஆரின் உடலைப் பார்க்க ஓடி வந்த கூட்டம், ஜெயலலிதாவை அருகே நெருங்க விடாமல் செய்தது. ஜெயலலிதா தன்னுடைய காரில் ஏறி உட்காருவதற்கும் ஆம்புலன்ஸ் புறப்பட்டு வேகமெடுக்கவும் சரியாக இருந்தது. ஏமாற்றத்தாலும் கோபத்தாலும் இறுகிப் போன ஜெயலலிதாவை ஏற்றிக்கொண்டு, கார் போயஸ் தோட்டத்துக்குப் பறந்தது.

காலை 6.30 மணி. நேரு ஸ்டேடியம்.

சரசரவென்று நாலு ஜீப்கள் நேரு ஸ்டேடியத்துக்குள் நுழைந்தன. மாலை நடைபெறவிருந்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்காகத் தடுப்புகள் கட்டும் ஏற்பாடுகள் ஜரூராக நடந்துகொண்டிருந்தன. ஜீப்பிலிருந்த இறங்கிய அந்த மூத்த போலீஸ் அதிகாரி சொன்னார்’.

எல்லோரும் வேலையை அப்படியே போட்டுட்டு முதல்ல ராஜாஜி பவனுக்குக் கிளம்புங்க!’

‘ஏன் ஸார்? ஃபங்ஷனை ராஜாஜி பவனுக்கு மாத்திட்டாங்களா?’

‘இல்லே. சி.எம். இறந்துட்டார்!’

காலை 7.00 மணி. ராஜாஜி பவன்.

ராஜாஜி பவனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்த மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் வந்த வேகத்தில் வாசலில் இருந்த அந்த இரும்புக்கதவு சரிந்தது. சவுக்காலான தடுப்புகளை அமைக்க வைத்திருந்த ஆணிகளை மிதித்து ஓடிவந்ததால், பலருக்கும் காலில் ரத்தம். பல்லவன் போக்குவரத்துக் கழக ஆபீஸில் ஆரம்பித்து சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை ராஜாஜி பவனைச் சுற்றிலும் போலீஸ்காரர்கள் மூன்றடிக்கு ஒருவர் என நின்று கொண்டு இருந்தனர்.

காலை 7.25 மணி.

‘சென்னையில் இன்று அதிகாலை காலமான தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி’ - சரோஜ் நாராயண்சுவாமி தலைப்புச் செய்தியை மீண்டும் வாசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் மண்டபத்தின் பின் வாசலில் ஒரே சலசலப்பு. கறுப்புநிற உடையில் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் முன்னால் நடந்து வந்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவருக்கு சில அடிகள் இடைவெளியில் ஆர்.எம். வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் என எம்.ஜி.ஆரின் அமைச்சரவை சகாக்கள் நடந்து வந்தனர்.

காலை 8.30 மணி.

மண்டபத்தின் நடுவிலிருந்த அந்தப் பெரிய மேஜை மீது ஒரு ஸ்டிரெச்சரில் எம்.ஜி.ஆர். உடல் கிடத்தப்பட்டிருந்தது. வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பட்டுத்துணி கட்டியிருந்தார்கள். மூக்கு துவாரங்களில் பஞ்சு வைத்திருந்தார்கள். வலது கையில் இருந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசம் இல்லாமல் கட்சிக்காரர்கள் வாசலில் காத்திருந்தார்கள். உள்ளே நுழைந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை உற்றுப் பார்த்தார். கண்களில் நீர்த்தி-வலைகள். வாய்விட்டு அழாமல் இறுக்கமாக நகர்ந்து எம்.ஜி.ஆரின் தலைமாட்டுக்கு வந்தவர், ஸ்டிரெச்சரின் இரும்புக் குழாய்களை இறுக்கமாகப் பற்றியபடியே அங்கேயே நின்றுகொண்டார்.

காலை 9.00 மணி.

அடிக்கடி எம்.ஜி.ஆருடைய முகத்தையே உற்றுப் பார்ப்பதும் பின்னர் எங்கேயோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாக இருந்த ஜெயலலிதா, அவ்வப்போது தன் கர்சீப்பால் முதல்வரின் முகத்தைச் சரிசெய்து கொண்டிருந்தார். யார் யாரோ வந்து ஜானகியின் சொந்தங்களைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னார்கள். யாரும் ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளவில்லை. பொதுமக்கள் பார்வைக்காக எம்.ஜி.ஆரின் உடல், மேடைக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்டிரெச்சரிலிருந்த எம்.ஜி.ஆரின் தலைப் பகுதியை கையில் ஏந்தியபடியே அந்தச் சரிவான மேடைக்கு வந்த ஜெயலலிதா, கடைசி வரை ஸ்டிரெச்சரை ஒட்டியே நின்றுகொண்டிருந்தார். தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பில் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் முகம்தான் பளிச்சென்று தெரிந்தது.

காலை 10.00 மணி.

அண்ணா சாலையிலிருந்த கருணாநிதியின் வெண்கலச் சிலைக்கு அன்று கஷ்டகாலம். ஐந்தாறு பேர் பீடத்தில் ஏறி, கடப்பாரையால் சிலையின் முதுகுப் பக்கத்தில் ஒரு துளை போட்டார்கள். சைக்கிள் டயரை கொளுத்திப் போட்டு கடப்பாரையால் இடிக்க, சிலை சரிய ஆரம்பித்தது. ரோட்டோரமாக நின்று அந்தப் புகைப்படக்காரரின் காமிராவில் ஃபிளாஷ் மின்னியது. நுங்கம்பாக்கத்தில் ஒரு டீக்கடையில் தகராறு. கடைக்காரர் காசு கேட்க, ‘தலைவரே போயிட்டாரு... காசா கேட்கிறே?’ அன்று அடித்துத் துவம்சம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான டீக்-கடையில் அதுவும் ஒன்று. அண்ணா சாலையில் நிறைய கடை-களில் கதவுகள் உடைந்து, விளக்குகள் நொறுங்கிக் கிடந்தன. சென்னை, கலவர பூமியாக மாறியிருந்தது!

மாலை 5.00 மணி.

ஜெயலலிதாவின் அருகிலிருந்த அந்த போலீஸ் அதிகாரி சொன்னார். ‘மேடம், காலையிலிருந்து நின்னுக்கிட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்!’. ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அசையாமல் அங்கேயே நின்று மாலையை சரிசெய்து கொண்-டிருந்த ஜெயலலிதாவின் கையில் நகக்கீறல்கள். எம்.ஜி.ஆரின் தலைமாட்டில் நிற்கக் கூடாது என்று எதிர்ப்பாளர்கள் அரங்கேற்றிய தள்ளுமுள்ளுவால் கிடைத்தவை.

இரவு 11.00 மணி.

எம்.ஜி.ஆரின் உடலைப் பார்க்க, நான்கு நான்கு பேராக நின்று கொண்டிருந்த பொதுமக்களின் கியூ , ராஜாஜி பவனில் ஆரம்பித்து சாந்தி தியேட்டர் வரை நீண்டு கொண்டே போனது. நெருங்கிய கட்சிக்காரர்கள் நிறையப் பேர் ஓய்வெடுக்க வீட்டுக்குப் போயிருந்தார்கள். போயஸ் தோட்டத்துக்குத் தனது காரில் கிளம்பிய ஜெயலலிதா, மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குத் திரும்பி வந்தார். மீண்டும் அதே தலைமாட்டுக்குப் பக்கமாக ஜெயலலிதாவுக்கு இடம் கிடைத்தது. 

பிற்பகல் 12 மணி.

எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்தின் உட்புறம் வைதீக காரியங்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. டெல்லியிலிருந்து நிறையப் பேர் வந்திருந்தார்கள். ஒரு பக்கம் சடங்குகள் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கட்சிக்காரர்கள் கூடிக்கூடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சு, மண்டபத்தில் இருந்து ஜெயலலிதாவை எப்படி வெளியேற்றுவது என்பதைப் பற்றியதாகத்தான் இருந்தது.

மதியம் 1 மணி.

ராணுவ டிரக்கில் எம்.ஜி.ஆரின் உடல் ஏற்றப்பட்டது. எம்.ஜி.ஆரின் முகத்தை மறைத்த மாலையைச் சரி செய்ய ஜெயலலிதா டிரக்கில் ஏற, அடுத்த சலசலப்பு ஆரம்பமானது. ராஜாஜி பவனில் உடலுக்குப் பக்கத்தில் நிற்கவே அனுமதிக்காதவர்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?

ஜெயலலிதா டிரக்கில் ஏற, ஒரு ராணுவ அதிகாரி கை கொடுத்து உதவி செய்யவே, கோபமான ஜானகியின் சொந்தங்கள் ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு டிரக்கில் ஏறினார்கள். ஏறுவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நெற்றியில் கை வைத்து யாரோ தள்ளிவிட்டார்கள்.

டிரக்கின் பிடி நழுவி ஜெயலலிதா தள்ளாடினார். கீழே விழவிருந்த ஜெயலலிதாவை இன்னொரு ராணுவ அதிகாரி தாங்கிக் கொண்டார். ‘Don't you know how to behave?’ என்ற அந்த அதிகாரியின் வார்த்தையை லட்சியம் செய்யாமல் ஜெயலலிதாவை வெளியேற்றுவதிலேயே மும்முரமாக இருந்தனர் அவருக்கு எதிரான ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள். தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பு காமிரா எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருந்தது.

விரக்தியும் அவமானமும் உறுத்தவே, கூட்டத்தைவிட்டு விலகி தனியே நடக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா. நிறைய சிந்தனையுடன் இருண்டு போன முகத்தோடு போயஸ் தோட்டத்துக்குத் திரும்பி வந்தவர், தன் அறைக் கதவை அடைத்துவிட்டு உள்ளே போனார். திரும்பி வெளியே வர நான்கு மணி நேரமானது.

ஜெயலலிதாவுக்கு எதிர்காலம் புதிராக இருந்தது. கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை வெளிச்சமில்லை. எம்.ஜி.ஆரை நம்பி அரசியலுக்கு வந்தவரை இப்போது தனிமை விடாமல் துரத்தியது. எம்.ஜி.ஆரின் கடைசி உத்தரவு என்கிற பெயரில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஜெயலலிதாவை சோர்ந்துபோக வைத்திருந்தன. கட்சி சார்பாகக் கொடுக்கப்பட்டு இருந்த டெலிபோனும் பறிக்கப்பட்டிருந்தது. எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை சந்திக்கக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு, கட்சிக்குள் அவரைக் கட்டம் கட்டி ஒதுக்கி வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் அவர், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என புடைசூழ வாழ்ந்தவர். ஆனால், இப்போது ஜெயலலிதா வெறும் தனிமரம்.

மறுநாள் சனிக்கிழமை, ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் போயஸ் தோட்டத்தில் கூடினார்கள். இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன என்பதைப் பற்றி மீடியா கிசுகிசுத்தபோது, ‘அந்தப் புனிதமான சூழ்நிலையை மாசுபடுத்தி சர்ச்சையாக்க விரும்பவில்லை’ என்று சொன்னார். ஆனால், அறிக்கையின் கடைசிப் பகுதி அவருடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது. ‘இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் எல்லாம் வசதியாகச் சென்றபோது, அப்பாவித் தொண்டர்கள் இரண்டாந்தரமாக நடத்தப்பட்டார்கள்!’

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை உண்மையில் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, தன்னை எளிதாக ஓரம் கட்டிவிடலாம் என்று நினைத்தவர்களின் வயிற்றில் உடனடியாகப் புளியைக் கரைத்தவர் ஜெயலலிதா. இது முடிவல்ல; ஆரம்பம்தான் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியதிலிருந்துதான் தொடங்குகிறது அவருடைய அரசியல் பயணம். பட்ட அடிகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. மீறி எழுந்துநின்று நினைத்ததை, சொன்னதைச் செய்து காட்டினாரே, அது.

ஆயிரம் குற்றச்சாட்டுகள். லட்சம் விமரிசனங்கள். கணக்கே இல்லாத கண்டனக் கணைகள். அதனாலென்ன? எம்.ஜி.ஆருக்குப் பின் அ.தி.மு.க. என்னாகும் என்கிற கேள்வியைத் திருத்தி எழுதி, ஜெயலலிதாவுக்குப் பின் அ.தி.மு.க. என்னவாகும் என்று கேட்கச் செய்த வகையில் அவரது வெற்றி கணிசமானதுதான். சந்தேகமில்லை.

*

ஜெயலலிதா - அம்மு முதல் அம்மா வரை - ஜெ. ராம்கி
கிழக்கு பதிப்பகம்
ரூ. 155

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com