விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த உலகநாதன் மகன் விஜயபிரகாஷ் (20), ராமச்சந்திரன் மகன் சஞ்சய் (24). லிப்ட் பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தனர். கடந்த 25ஆம் தேதி விஜயபிரகாஷின் பிறந்த நாளையொட்டி, அவர் தனது நண்பரான சஞ்சய் உள்ளிட்ட சிலருடன் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
பின்னர், அங்கிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கலிகுப்பம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் விஜயபிரகாஷ், சஞ்சய் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயபிரகாஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சஞ்சய் காயமடைந்தார்.
தகவலறிந்த மரக்காணம் போலீஸார் அங்கு விரைந்து சென்று சஞ்சயை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.