சென்னை சோழிங்கநல்லூரில் ஆராய்ச்சி-வளர்ச்சி ஆய்வுக் கூடத்தை ஃபோர்டு நிறுவனம் அமைக்க உள்ளது.
ஒரு ஏக்கருக்கு ரூ.13.07 கோடி வீதம் 28 ஏக்கர் நிலம் ஆய்வுக் கூடத்துக்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் ஃபோர்டு குழுமத்தின் தொழில் வளர்ச்சிக்காக, பல்வேறு உதவிகளை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் முதன்முதலாக தனது தொழிற்சாலையை கடந்த 1996-ஆம் ஆண்டு ஜனவரியில் அமைத்தது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் கீழ், ரூ.1,700 கோடி முதலீட்டுடன் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் அந்த ஆலை அமைக்கப்பட்டது. தமிழக அரசு தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அளித்து வரும் ஆதரவுக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபோர்டு நிறுவனத்தினர் நன்றி தெரிவித்தனர்.
அந்த வகையில், ஃபோர்டு குழுமத்தின் தலைவர் வில்லியம் கிளே ஃபோர்டு, தலைமைச் செயலகத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்தார்.
ஆராய்ச்சி-வளர்ச்சிக் கூடம்: ஃபோர்டு குழுமத்துக்கு ஆராய்ச்சி-வளர்ச்சி ஆய்வுக் கூடம் அமைக்க சென்னை சோழிங்கநல்லூரில் ஏக்கருக்கு ரூ.13.07 கோடி வீதம் 28 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு போர்டு நிறுவனத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும், ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி வரும் 2019-இல் நிறைவு பெறும் எனவும், இந்த ஆய்வுக் கூடத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க இருப்பதாகவும் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் வில்லியம் கிளே ஃபோர்டு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர், திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.