காவிரி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மத்திய அரசு உறுதியாகச் செயல்படுத்த வேண்டும்
காவிரி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மத்திய அரசு உறுதியாகச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் கூறியுள்ளனர்.
ராமதாஸ்: உச்ச நீதிமன்ற ஆணைப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணி தொடங்கிவிட்டதாக மத்திய நீர்வளத்துறை செயலர் சசிசேகர் கூறியிருப்பது மகிழ்ச்சி. இந்த வாரியம் இன்னொரு பொம்மை அமைப்பாக இருந்துவிடக் கூடாது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான காவிரி ஆணையம் அமைப்பதில் தமிழகத்துக்குத் துரோகம் இழைக்கப்பட்டது. இதற்கான வரைவுத் திட்டத்தில், ஆணைய உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தாவிட்டால், அங்குள்ள அணைகளை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இறுதியில் அத்தகைய எந்த அதிகாரமும் இல்லாத அரசியல் அமைப்பாகத் தான், காவிரி நதிநீர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. அதே போன்று காவிரி மேலாண்மை வாரியமும் அதிகாரமில்லாமல் அமைந்துவிடக்கூடாது.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாதிரியாக நடுவர் மன்றத்தால் கூறப்பட்டுள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக உள்ளது.
இந்த வாரியம்தான் பக்ரா, நங்கல், பியாஸ் திட்டங்களின் அணைகளை இயக்கி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாலய பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய 7 மாநிலங்களுக்கு நீரையும், மின்சாரத்தையும் வழங்கி வருகிறது.
50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்தச் சிக்கலும் இல்லாமல் நீரையும், மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது. காவிரி பிரச்னைக்கும் இதேபோன்ற நிரந்தரத் தீர்வுதான் தேவை.
இரா.முத்தரசன்: உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளதையும் மீறிச் செயல்பட்டால், கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-க்குள் அமைத்திட வேண்டும் என்ற தீர்ப்பையும் மத்திய அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும்.
வைகோ: உச்சநீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்புகளை வரவேற்பதுடன், அதனைச் செயல்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழ.நெடுமாறன்: உச்ச நீதிமன்றத்தையும் அரசியல் சட்டத்தையும் மதிக்காமல் செயல்பட்ட கர்நாடக அரசுக்கு தனது கடும் கண்டனத்தையும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருப்பது பாராட்டத் தக்கதாகும். இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு நல்லத் தீர்ப்பு பெற்றுக் கொடுத்த தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com