சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 17 லட்சம் குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், சென்னை, சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், புதிய குடும்ப அட்டை வேண்டி உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கு 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 இலட்சத்து 22 ஆயிரத்து 781 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை, 5 இலட்சத்து 12 ஆயிரத்து 977 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன. புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டுமென அமைச்சர் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
பொதுவிநியோக திட்ட பொருள்களை கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை 913 நபர்கள் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு எடுத்து வரும், விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை வெளிச்சந்தையில் வெகுவாக குறைந்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர், மாவட்டங்களில் இவ்வகை பொருள்களின் விற்பனை விலையை தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டுமென மாவட்ட வழங்கல் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.