திருப்பரங்குன்றம்: இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் நடப்பதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ஆட்சியர் வீரராகவ ராவ்.
அப்போது, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
24x7 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளும் முழு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க 1800 4425 3340 என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் புகார் அளிக்க 8930303451 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம் என்று மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இடைத்தேர்தல் நடைபெறுவதால், பொதுமக்கள் பணத்தை வெளியே எடுத்துச் செல்லும் போது அதற்கான ஆவணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
தேர்தல் முறைகேடு குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.