புது தில்லி: மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று மாலை புது தில்லியில் சந்தித்துப் பேச உள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டத்துக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
எனவே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை இன்று மாலை சந்திக்கும் அமைச்சர் தங்கமணி, மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழகம் சேருவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டம் என்பது, பல்வேறு மாநிலங்களில் உள்ள நலிவுற்ற மின் விநியோக நிறுவனங்களை மேம்படுத்த உதவுவதே ஆகும்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், மின் விநியோக நிறுவனம் கடனில் இருந்தால் அதில் 75 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும்.
மின் விநியோக நிறுவனங்களும் 25 சதவீத கடன் பத்திரங்களை அளித்து, 3 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்வது, நிர்வாகத் திறனை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்துவது என உதய் திட்டத்தின் சாராம்சங்கள் அமைந்துள்ளன.