வடகிழக்கு திசையில் காற்று வீசாத காரணத்தினால், பருவமழைக்கு சாதகமான சூழல் இன்னும் அமையவில்லை. எனவே, பருவமழை ஒரு வாரத்துக்கு மேல் தாமதமாக வாய்ப்புள்ளது என சென்னை வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் அக்டோபர் மாதம் 19 -ஆம் தேதி நிறைவடைந்தது. ஆனால் தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைய பெய்யக்கூடும்.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, விலகிக் கொள்ளும்போதுதான் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் அமையும்.
எனவே அக்டோபர் 25 -ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பில்லை. இம்மாத இறுதியில், அக்டோபர் 28 -ஆம் தேதியளவில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது வழக்கமான அளவு அல்லது வழக்கத்தைவிட சற்று குறைந்த அளவு பெய்யக்கூடும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 320 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 250 மி.மீ. மழைதான் பெய்துள்ளது. இது 19 சதவீதம் குறைவாகும். ஆனால் சென்னையில் சராசரி 439 மி.மீ. மழைக்குப் பதிலாக 495 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 13 சதவீதம் அதிகமாகும் என்றார் அவர்.
வெப்பச்சலனத்தால் மழை: தமிழகத்தில் சில இடங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 50, லால்குடியில் 40 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கட்டு, திருச்சி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 30 மி.மீ, மதுரை மாவட்டம் சோழவந்தான், தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழையும் பெய்துள்ளது.