வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வீர, தீரச் செயல் புரியும் பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் குடியரசு தின விழாவின்போது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம், தகுதியுரை ஆகியன கொண்ட இந்த விருதுகள் முதல்வரால் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பில்லை.
பதக்கத்துக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், வீர, தீரச் செயல்கள், அவை தொடர்பான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுக வேண்டும். அவர் மூலமாக ""அரசு முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009'' என்ற முகவரிக்கு வரும் டிசம்பர் 15-க்குள் அனுப்ப வேண்டும்.
அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு முதல்வரால் குடியரசுத் தினத்தன்று பத்தகம் வழங்கப்படும் என்று பொதுத் துறை முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.