வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நாகை, காரைக்கால், பாம்பன், கடலூர் துறைமுக அலுவலகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரிலிருந்து 500 கி.மீ. தொலைவில், வடமேற்கு திசையில், வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதையொட்டி, நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்கால் மார்க் துறைமுகத்திலும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
நாகை, காரைக்கால் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் மந்தமான குளிர் வானிலை நீடித்தது. பிற்பகல் சுமார் 3.30 மணிக்கு நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் லேசான மழை தூறல் இருந்தது.
பாம்பனில்... பாம்பன் கடலில் வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளி வீசியதால் துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடலூரில்... வங்கக் கடலில் அந்தமானுக்கு வடகிழக்கே சுமார் 500 கி.மீ. தொலைவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலூர் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் துறைமுக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.