முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார்: அப்பல்லோ தகவல்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பேசுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் டாக்டர் என்.சத்யபாமா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சுவாச ஆதரவு சிகிச்சை மற்றும் இயன்முறை மருத்துவ சிகிச்சை ("பாஸிவ் ஃபிஸியோதெரப்பி') ஆகியவை தொடர்ந்து வழங்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த தீவிர சிகிச்சை குழுவில் உள்ள மூத்த இருதய சிகிச்சை நிபுணர்கள், சுவாசப் பிரச்னைகளுக்கான மூத்த நிபுணர்கள், நோய்த்தொற்று சிகிச்சைத் துறையைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள், நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் சர்க்கரை நோய் மூத்த நிபுணர்கள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து, அவரது உடல்நிலையைக் கவனித்து வருகின்றனர்.
உணவு நிபுணர்கள் மூலம்...முதல்வருக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்து மற்றும் அவர் உட்கொள்ளும் அத்யாவசிய ஊட்டச்சத்துக்களையும் உணவு ஆலோசனை குழுவில் உள்ள நிபுணர்கள் நேரடியாகக் கவனித்து வருகின்றனர். தற்போது முதல்வர் ஜெயலலிதா உரையாடி வருகிறார். அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 நாளாக சிகிச்சை: உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து 30-ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். உயர் சிகிச்சைக்காக லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்டு பீல் வரவழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 நிபுணர்கள் அடங்கிய குழுவினர் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சிறப்பு நிபுணர்கள் 3-ஆவது முறையாக சென்னைக்கு வந்து அக்டோபர் 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சிகிச்சை அளித்தனர்.
சிங்கப்பூர் நிபுணர்கள்: இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த 2 பெண் இயன்முறை நிபுணர்கள், முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனை நிபுணர்களுடன், சிங்கப்பூர் இயன்முறை நிபுணர்களும் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து, லண்டன் மருத்துவர் டாக்டர் ரிச்சர்டு பீல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (அக்.23) மருத்துவமனைக்கு வர உள்ளார் என்று கூறப்படுகிறது.
குமரி அனந்தன், நடிகர் விஜயகுமார்: முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன், நடிகர் விஜயகுமார் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.