சென்னை: கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு, போட்டியில் வென்றதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை அனுப்பிய சென்னை மாணவனுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை மடிப்பாக்கம் சன்னதி தெருவைச் சேர்ந்த கணேஷ் கண்ணன் - சங்கீதா தம்பதியின் மகன் ஷேஷாங் (10). ஆதம்பாக்கத்தில் உள்ள டிஏவி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
சமீபத்தியில் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இந்து ஆன்மிக கண்காட்சி நடந்தது. இதில் நடந்த சமஸ்கிருத போட்டியில் கலந்துகொண்ட மாணவன் ஷேஷாங்கிற்கு முதல் பரிசாக ரூ.1,000 கிடைத்தது.
பரிசுத்தொகையை பிரதமரின் கங்கை தூய்மை திட்டத்துக்கு அனுப்ப மாணவன் ஷேஷாங் முடிவு செய்தான். இதையடுத்து தனக்கு கிடைத்த பணத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பினான். அத்துடன் ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினான்.
அதில், ‘இந்தியாவின் ஆன்மிக நதி கங்கை. அதனை முறையாக பராமரிக்க வேண்டும். பிரதமர் மோடியை சந்திக்க விரும்புகிறேன். இயற்கையை ரசிப்பதால் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை நான் பயன்படுத்துவதில்லை’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் அலுவலக செயலாளர் பி.கே.பாலி மாணவன் ஷேஷாங்க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘உங்களது கடிதம் மற்றும் நிதி உதவி கிடைக்கப்பெற்றோம். உங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்’ என்று கூறப்பட்டு உள்ளது.