வெளிச்சந்தையைவிட 50 சதவீதம் குறைந்த விலையில் கூட்டுறவு நிறுவனங்களில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
தீபாவளியையொட்டி, கூட்டுறவு நிறுவனங்களில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடியில் விற்பனை- பாதுகாப்பு ஏற்பாடுகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த பின்னர், செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், இதர கூட்டுறவு நிறுவனங்களில் பட்டாசு விற்பனை நடக்கிறது.
இங்கு தரமான பட்டாசுகள் வெளிச்சந்தையைவிட 50 சதவீதம் குறைந்த விலையில், காலை 9 முதல் இரவு 10 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் மட்டும் 20 இடங்களில் கூட்டுறவுத் துறை மூலம் பட்டாசு விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது, சுமார் ரூ.21 கோடிக்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டது என்றார்.