மதுரை: மதுரையில் 150 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுப் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து பாண்டிகோவில் சுற்றுச்சாலை பகுதியில் போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில் காரில் கொண்டு வரப்பட்ட 2 மூட்டைகளை பிரித்து சோதனையிட்டனர். இரு மூடைகளிலும் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து காரில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த அரசன் மகன் கார்த்திக்ராஜா(29), பால்ராஜ் மகன் மதன்(27) ஆகியோர் என்பதும், ஆந்திராவில் கஞ்சாவை வாங்கி அதை கேரளத்துக்கு விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.