இந்திய கடற்படையினர், தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதிகளில் ஹெலிகாப்டரில் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலோரப் பகுதிகளிலிருந்து முக்கியமாக, தனுஷ்கோடியிலிருந்து கடல் அட்டை கடத்துவது, அகதிகளை ஏற்றிச் செல்வது, போதைப் பொருள்களையும் இலங்கைக்கு கடத்தல்காரர்கள் தொடர்ந்து கடத்திச் செல்கின்றனர். இந்த கடத்தல் சம்பவங்களை, ராமேசுவரம் பகுதியிலுள்ள சுங்கத் துறையினர், கடலோரக் காவல் படையினர், கடலோரப் பாதுகாப்பு போலீஸார் உள்ளிட்டோரால் தடுக்க முடியாமலும், மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீஸாரும் கண்காணிக்க முடியாமலும் உள்ளனர். இந்த நிலையில், கடத்தலைத் தடுப்பதற்காகவும், கடத்தல்காரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளான ராமேசுவரம், தனுஷ்கோடி, மண்டபம், பாம்பனில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டரில் பல மணி நேரம் ரோந்து வந்தனர்.