தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த கியாந்த் புயலானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வலுவிழந்து அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த புயல் வலுவிழந்து, காற்றழுத்த மண்டலமாக மாறியது. தற்போது அது மேலும் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் குறிப்பாக வட மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை நகரின் ஒரு சிலப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
30 -ஆம் தேதி பருவமழை: தென்மேற்கு பருவமழையானது முழுவதும் விலகிக் கொண்டுவிட்டது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழல் உருவாகி வருகிறது. எனவே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஞாயிற்றுக்கிழமை (அக்.30) தொடங்க வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்தார்.