கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசு முழு ஒத்துழைப்பு: அமைச்சர் தகவல்!

தமிழர்களின் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் விதமாக கீழடியில் மூன்றாம் கட்ட  அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்...
கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசு முழு ஒத்துழைப்பு: அமைச்சர் தகவல்!

மதுரை: தமிழர்களின் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றும் விதமாக கீழடியில் மூன்றாம் கட்ட  அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை அருகே உள்ள கீழடியில் சமீபத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது, அங்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷங்கள் கண்டறியப்பட்டது. மேலும் சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன.

இத்தகைய சிறப்பு கொண்ட கீழடியில் நிரந்தர அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும், மேலும்  தொடர்ந்து ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி உட்பட எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் அரசிடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மதுரை கீழடியில் உள்ள அகழ்வாராய்ச்சி பகுதிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

கீழடியில் தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்கு கொண்டு செல்ல கோர்ட் அனுமதிக்க வேண்டும். கீழடியில் தொடர் ஆய்வுக்கு 2 ஏக்கர் நிலம் அரசின் சார்பில் வழங்கப்படும் இதே பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க அரசு  ஆலோசித்து வருகிறது.

இவ்வாறு மாஃபா பாண்டியன் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com