காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள் சார்பாக வரும் வெள்ளியன்று நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த போராட்டத்தில் தமிழர்கள் மீது நடத்தபப்டும் தாக்குதல்கள் மற்றும் அவர்கள்தம் உடைமைகளுக்கு சேதங்கள் விளைவிப்பதை கண்டித்து, தமிழகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது
விவசாய சங்கங்கள், லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்த் போராட்டத்திற்கு எதிர்க்கட்சியான திமுக ஆதரவு அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி அந்த சங்கங்களில் கோரிக்கையை ஏற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்குமென்று அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.