இந்து முன்னணி பிரமுகர் படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் கோவையில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வியாழக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இதையொட்டி, இந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டம் காரணமாக கோவை மாநகரம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சிசிகுமாரின் இறுதி ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறுதி ஊர்வலப் பாதையில் கடைகள், வழிபாட்டுத் தலங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றது. துடியலூரில், காவல் துறை வாகனமும், சில கடைகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதையடுத்து காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
இந்த நிலையில், கோவை மாநகரின் பல இடங்களில் பெரும்பாலான கடைகள்
சனிக்கிழமையும் அடைக்கப்பட்டிருந்தன. டவுன் ஹால், பெரிய கடை வீதி, காந்திபுரம், 100 அடி சாலை, அவிநாசி சாலை, ராமநாதபுரம், திருச்சி சாலை, உக்கடம், தடாகம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சில கடைகள் திறக்கப்பட்டபோதிலும், காந்தி பூங்கா உள்ளிட்ட சில இடங்களில் மீண்டும் கல்வீச்சு நடைபெற்றதை அடுத்தும், தொடர்ந்து பரவிய வதந்திகளாலும் பிற்பகலில் அந்தக் கடைகளும் அடைக்கப்பட்டன. மாலையில் நிலைமை ஓரளவுக்கு சீரானதும் 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டன.
கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் வழக்கம்போல பேருந்துக்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டன.
108 பேர் கைது: இதற்கிடையே, வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாநகரில் 19 வழக்குகளும், புறநகரில் 25 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 108 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200 பேர் கைது: அதேபோல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கோவைக்கு வரவழைக்கப்பட்டுள்ள சுமார் 3,500 காவல் துறையினரும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.