புது தில்லி: காவிரி நதிநீர் தமிழகத்துக்குக் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
மத்திய அரசு தலைமையிலான காவிரி நதிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புது தில்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பிரதிநிதிகளும், தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவரது உரை வாசிக்கப்பட்டது.
அதில், ஒரு போக சம்பா சாகுபடிக்காவது கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும், அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்யவேண்டும். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.