புதுச்சேரி: ஹிந்துத்வா இயக்க தலைவர்களை தெடர்ந்து திட்டமிட்டு படுகொலை செய்யும் பயங்கரவாதிகளை கைது செய்யாத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி மாநில பாஜக சார்பில் ராஜிவ் காந்தி சதுக்கத்தில்
வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் சாலை மறியல் நடைபெற்றது. இதுதொடர்பாக 100-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம், புதுவையில் ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து குறி வைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். 10-க்கு மேற்பட்ட நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளநர். மேலும் பாஜக நிர்வாகிகள் வீடுகள், சொத்துக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஹிந்து அமைப்பு தலைவர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் பயங்கரவாதிகள் இச்செயலில் ஈடுபடுகின்றநர். தமிழக, புதுச்சேரி அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் வாக்கு வங்கி அரசியலுக்காக வேடிக்கை பார்க்கின்றன.
இதைக் கண்டித்தும், பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஆர்வி. சாமிநாதன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தலைவர்கள் கேசவலு, தாமோதரன், மாநில நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வம், துரைகணேசன், முருகன், நாகராஜ், ஜெயந்தி லட்சுமி, சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.
சாலை மறியல் போராட்டத்தால் ராஜிவ் காந்தி சதுக்கத்தில் போக்குவரத்து 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மறியல் ஈடுபட்ட 100-க்கு மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.