சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபடியே மக்கள் பணியாற்றி வருகிறார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா தற்போது குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் பரவுவதால் மக்கள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்த சி.ஆர். சரஸ்வதி, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் நலமாக இருக்கிறார். மருத்துவமனையில் இருந்தபடியே மக்கள் பணியை ஆற்றி வருகிறார். காவிரி விவகாரம் முதல் அனைத்து மக்கள் பிரச்னையையும் அவர் கவனித்து வருகிறார்.
தப்பான எண்ணத்தோடு, தீய நோக்கத்தோடு பொய்யான வதந்தியை சிலர் பரப்பி வருகின்றனர். அதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார் என்று கூறினார்.