தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி அக்டோபர் 2 -ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனும் மெளன விரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.
இதுதொடர்பாக ராமதாஸ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் மதுவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் எனக் கூறி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்தப் பணியின் முதல்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதாகவும், மது விற்பனையை 2 மணி நேரம் குறைப்பதாகவும் அரசு அறிவித்தது.
ஆனால், மது விற்பனை குறைவாக இருந்த 500 கடைகள் மட்டுமே மூடப்பட்டன. விற்பனை நேரத்தை மாலையில் குறைப்பதற்குப் பதில் காலையில் குறைத்ததால் மது விற்பனை சற்றும் குறையவில்லை.
மதுவின் தீமை புற்றுநோயைவிட வேகமாகப் பரவிவரும் நிலையில், அதன் கொடுமையிலிருந்து தமிழகத்தைக் காக்க ஒரே தீர்வு முழு மதுவிலக்கு மட்டும்தான்.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, காந்தி ஜெயந்தியன்று (அக்.2) காலை 9 மணி முதல் 11 மணி வரை, சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகில் அமர்ந்து மௌன விரதத்தைக் கடைப்பிடிக்க உள்ளோம். எனது தலைமையில் நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தில் குமரி அனந்தன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.