பத்மநாபபுரம் அரண்மனை விரைவில் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெறும் என, கேரள தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.
பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜையில் பங்கேற்க, பவனியாக எடுத்துச் செல்வது இரு மாநில மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. இது இரு மாநிலங்களையும் ஒருங்கிணைக்கும் விழாவாக திகழ்ந்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் இயந்திரம் மூலமாக அப்பம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பத்மநாபபுரம் அரண்மனையானது மரத்தால் அமைக்கப்பட்ட அரண்மனையாகும். இந்த அரண்மனை யுனெஸ்கோவின் உலக கலாசார பட்டியலில் இடம் பிடிக்க அரசு அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்தபின் யுனெஸ்கோவின் பட்டியலில் அரண்மனை இடம்பெறும் என்றார் அவர்.