பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-07 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தியதாகவும், இந்த இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில் அரசுக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கில் தில்லி சிபிஐ போலீஸார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையைப் பெற ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குற்றப்பத்திரிகையை நகலைப் பெற மாறன் சகோதரர்கள் இன்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். சன் டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி, தயாநிதி தனிச்செயலாளர் கவுதமன், பிஎஸ்என்எல் அதிகாரிகள் பிரம்மநாதன், வேலுச்சாமி உள்ளிட்டோரும் ஆஜராகினர். மாறன் சகோதரர்கள் ஆஜரானதை தொடர்ந்து வழக்கு விசாரணை மே 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.