மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புழல் சிறையில் மவுன விரதம் மேற்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வைகோ இன்று தனது தந்தை வையாபுரியின் நினைவு நாளையொட்டி சிறையிலேயே மவுன விரதம் கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.
வைகோவின் தந்தை வையாபுரி கடந்த 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மறைந்தார். அதுமுதல் வைகோ கடந்த 44 ஆண்டுகளாக ஏப்ரல் 5ஆம் தேதி தவறாமல் மவுன விரதம் கடைபித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நாளில் வைகோ, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர்கூட குடிக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.