சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு நாளை நேரில் ஆஜராகுமாறு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் , நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வீடு மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமியின் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது.
இதில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கணக்கில் வராத 5 கோடி ரூபாய் பணமும், முக்கியமான ஆவணங்களும் சிக்கியதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி ஆகிய மூவரையும், நாளை (திங்கள்) நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் சரத்குமாரை காலை 10.30 மணிக்கும், விஜயபாஸ்கர் 11.00 மணிக்கும் மற்றும் டாக்டர் கீதாலட்சுமியை 11.30 மணிக்கும் ஆஜராகுமாறு அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் அவர்களது வீட்டில்க கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.