சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12ம் தேதி நடக்கவிருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
துரைமுருகன்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு அதனால் தேசிய அளவில் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவிற்கு ஆளுங்கட்சியே காரணம் என குற்றம்சாட்டிய திமுக மூத்த தலைவரும், கட்சியின் முதன்மை செயலாளருமான துரைமுருகன், மானமுள்ள அரசு என்றால் ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
டி.டி.வி.தினகரன்: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழிசை செளந்திரராஜன்: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரவேற்கதக்கது. குறிப்பாக நேர்மயைாக தேர்தல் நடத்தும் சூழ்நிலையில் வரும் போது தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருப்பது, மீண்டும் தேர்தல் நடந்தால் பணப்பட்டுவாடா நடக்கும் என கூறியவர்களுக்கு பதிலடி என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம்: ஆர்.கே.நகரில் பட்டுவாடா செய்யப்பட்டது முறையான பணமா? என ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபா: தேர்தலில் ரத்துசெய்து பயன் இல்லை, பணத்தால் தேர்தலில் வெற்றி பெற நினைக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தீபா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
முத்தரசன்: தமிழகத்தில் பாஜக காலூன்றவே இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருமாவளவன்: தேர்தல் ரத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. தேர்தல் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தேர்தல் கமிஷன் கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை கண்டு பிடித்ததை போல் ரத்து செய்ததும் வேதனை அளிக்கிறது. வெளியூர் ஆட்களை ஆர்.கே.நகரில் இருந்து ரேத்தல் ஆணையத்தால் கடைசி வரை வெளியேற்ற முடியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.