சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் புதன்கிழமை(ஏப்.12) நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், பணப்பட்டுவாடா காரணத்தால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
அ.தி.மு.க (அம்மா) அணி சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்.
ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சவப் பெட்டியின் மாதிரியை காண்பித்து பிரசாரம் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த அணியினர் மன்னிப்பு கோரி இருந்தனர். அந்தப் பரப்புரையில், முன்னாள் அமைச்சரும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மாஃபா.பாண்டியராஜன் ஈடுபட்டிருந்தார்.
இதையடுத்து, அவர் உள்பட அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தேசியக்கொடியை தவறாக பயன்படுத்தி பிரசாரம் செய்ததற்காக, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பன்னீர்செல்வம் அணியினர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.