இடைத்தேர்தலை ரத்து செய்வதால் மட்டுமே எந்தவித மாற்றமும் வரப்போவதில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆர்.கே.நகர் தொகுதியில் ஆரம்பம் முதலே வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா நடைபெற்றது. எனவே, வெறும் தேர்தலை ரத்து செய்வதால் மட்டுமே இங்கு எந்தவித மாற்றமும் வரப்போவதில்லை.
இதேபோலத்தான் அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பண விநியோகமும் நடைபெற்றது. ஆளும் கட்சிதான் தேர்தலில் வெற்றிபெற்றது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அவ்வாறு இல்லாமல் இரும்புக் கரம் கொண்டு, பணம் பட்டுவாடா செய்த அதிமுக அம்மா அணி, திமுக ஆகிய இரு கட்சி வேட்பாளர்களையும் இந்தத் தேர்தலில் இருந்து தகுதிநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும்.
அப்போதுதான் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.