சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வந்த ஏடிஎம்களில் கடந்த ஒரு வார காலமாக பணம் இல்லாத நிலையில், இருக்கும் ஒரு சில ஏடிஎம்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் இறுதி நாட்களில் பெரும்பாலான வங்கி ஏடிஎம்கள் பணமில்லாமல் மூடப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஏடிஎம்மாக ஏறி இறங்கும் பொதுமக்கள் கையில் காசில்லாமல் கவலையோடு வெளியேறுவதைப் பார்க்க முடிந்தது.
மாதத் துவக்கத்தில் சம்பளப் பணத்தை எடுக்க கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் அல்லல்பட்ட ஏராளமானோர் இந்த வாரத் துவக்கத்தில், திறந்து அதே சமயம் பணமும் இருக்கும் ஏடிஎம்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதைப் பார்த்து அச்சம் அடைந்தனர்.
எஸ்பிஐ வங்கியுடன், எஸ்பிஐ ஹைதராபாத் உள்ளிட்ட 6 வங்கிகள் இணைந்த பிறகு, பெரும்பாலான எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களின் செயல்பாடு ஸ்தம்பித்தது.
பிற வங்கிகளும் பணம் இல்லை என்ற அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டின. பணமில்லாத ஏடிஎம்களும், நீண்ட வரிசைகளும் நவம்பர் மாதத்தையே நினைவூட்டுகின்றன.
இதற்கு சரியான காரணமோ, இதன் பின்னணியில் இருக்கும் காரியமோ இதுவரை தெரியவரவில்லை.
சென்னை மற்றும் தமிழகத்தில் மட்டும் இல்லை. இந்தியா முழுக்கவே இந்த நிலை தான் உள்ளது. ஹைதராபாத், புனே, வாராணசி என ஏராளமான நகரங்களில் ஏடிஎம்களில் பணமில்லாமல் மக்கள் அவதிப்படுவதாகவும் செய்திகள் பதிவாகியுள்ளன.