உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் உதவித்தொகை உயர்வு: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை: முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இயற்கை மரணத்துக்காக வழங்கப்படும் உதவித் தொகையை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும்பொருட்டு, "தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்" என்ற சமூக பாதுகாப்புத் திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 15.8.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும், வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய, விரிவுப்படுத்தப்பட்ட, சமூக பாதுகாப்புத் திட்டம், "முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்" என்ற பெயரில் 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கத்தில் உள்ளது.
இந்தத் திட்டத்தில் உறுப்பினராகச் சேர்ந்துள்ள விவசாயிகள் மற்றும் விவசாயக் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி, மகப்பேறு உதவித் தொகை, முதியோர் ஊதியம் ஆகியவை வழங்கப்பட்டுவருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் விவசாய உறுப்பினராகப் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இயற்கை மரணம் எய்தினால், அவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில், உதவித் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் நலனில் அக்கறைகொண்டுள்ள இந்த அரசு, முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணத்துக்காக வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.