பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பியை பணி நீக்கம் செய்யக்கோரி மீண்டும் போராட்டம்

மதுக் கடையை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பியை பணி நீக்கம் செய்யக்கோரி அப்பகுதிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.

திருப்பூர்: மதுக் கடையை மூடக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பியை பணி நீக்கம் செய்யக்கோரி அப்பகுதிகள் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், மங்கலம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட சாமளாபுரம் பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் மதுக் கடை மூடப்பட்டது.
அதற்குப் பதிலாக, சாமளாபுரம், நான்கு சாலை சந்திப்பு அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிய மதுக் கடை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. அந்த மதுக் கடையை மூடக் கோரி, சாமளாபுரம் பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் நான்கு சாலை சந்திப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்திப்பானது, திருச்சி - கோவை, சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் பகுதியாகவும், காரணம்பேட்டை, மங்கலம் செல்லும் பிரதான சாலைகள் சந்திக்கும் பகுதியாகவும் உள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மங்கலம் போலீஸார் சாலைமறியல் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் சாலை மறியல் தொடர்ந்தது.
அதைத் தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். கூடுதலாக ஆயுதப்படையினரும் சிறப்பு பாதுகாப்புப் படைப் பிரிவினரும் குவிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை மாலையாகியும் மக்கள் போராட்டத்தைக் கைவிடாத நிலையில், பாண்டியராஜன் தலைமையிலான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இந்தத் தடியடியால் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சாமளாபுரத்தைச் சேர்ந்த சிவகணேஷுக்கு மண்டை உடைந்தது. அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரியை, கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தாக்கியதில் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மீதும் போலீஸார் தாக்குதல் நடத்தினர். இதில், காட்சி ஊடக ஒளிப்பதிவாளர்கள் இருவர் காயமடைந்தனர். அவர்களின் கேமராக்களும் சேதமடைந்தன.
இந்நிலையில், பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரி திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com