ராடன் நிறுவனத்தில் ரெய்டு: நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ராடன் நிறுவனத்தில் ரெய்டு: நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்


சென்னை: நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று ராடன் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்ட அதே சமயத்தில், ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமாரிடமும் வருமான வரித்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சரத்குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் மற்றும் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோர் வீடுகள் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7, 8-ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.

இந்தச் சோதனையில் விஜயபாஸ்கர் உதவியாளர் வீடுகளில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி விநியோகம் செய்யப்பட்டதாக விஜயபாஸ்கர் தரப்பினரிடம் இருந்து ஒரு ஆவணமும் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் தொடர்பாக வருமான வரித்துறையினர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் திங்கள்கிழமை விசாரணை செய்தனர். இதில் விஜயபாஸ்கரிடமும், ராஜேந்திரனிடமும் நான்கரை மணி நேரம் விசாரணை செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், அடுத்த கட்ட விசாரணைக்கு ஒரு வாரத்துக்குள் ஆவணங்கள், ஆதாரங்களுடன் ஆஜராகும்படி அனுப்பி வைத்தனர். அதேவேளையில் சரத்குமாரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகாவுக்கு சொந்தமான தேனாம்பேட்டை ஜெயம்மாள் சாலையில் உள்ள ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் திடீர் சோதனை நடத்தினர்.

விசாரணையின்போது சரத்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், இச் சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மாலை 3 மணிக்கு கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர்.

அங்கிருந்த சரத்குமாரிடம் சுமார் ஒரு மணி நேரம் அந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். பின்னர் சரத்குமார் தனது காரில் தேனாம்பேட்டையில் உள்ள ராடன் நிறுவன அலுவலகத்துக்கு வந்தார். அவருடைய காரில் வருமான வரித்துறை அதிகாரிகளும் வந்தனர்.

ராடன் நிறுவனத்தின் வங்கி கணக்குகளும், சில ஆவணங்களும் சரத்குமார் பெயரிலும், ராதிகா பெயரிலும் இருந்ததால், அதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும், ராடன் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை வருமான அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு 9 மணியை தாண்டியும் நீடித்தது. இந்தச் சோதனையின்போது சரத்குமாருடன் அவரது ஆடிட்டர், வழக்குரைஞர்கள் ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com