சென்னை: ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மாஃபா பாண்டியராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல் செய்யப்பட்ட பொம்மையொன்றுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அந்த பெட்டியின் மீது தேசியக் கொடியும் போர்த்தப்பட்டிருந்தது.
இதன் காரணமாக தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறவிருந்த நிலையில் தற்பொழுது ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.