சென்னை: கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குநர் கௌதமன் தலைமையின் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டு, காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இயக்குநர் கௌதமன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலைக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேம்பாலச் சாலைக்கு குறுக்கே சங்கிலியால் இணைத்து பூட்டுகளைப் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 40 நிமிடத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. அலுவலகத்துக்குச் செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காததால், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
பிறகு, சாலைக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்புச் சங்கிலிகளை இணைத்து போடப்பட்டிருந்த பூட்டுகளை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
விவசாயிகள், மீனவர்களின் பிரச்னைகளில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கௌதமன் கூறினார்.