துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் வருமானவரித் துறை 7 மணி நேரம் விசாரணை

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் வருமானவரித் துறையினர் புதன்கிழமை 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் வருமானவரித் துறையினர் புதன்கிழமை 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் உள்பட 50 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7,8 ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.
இதில் துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் நடைபெற்ற சோதனையில், 2 கிலோ தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கீதாலட்சுமிக்கு வருமானவரித் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால் கீதாலட்சுமி, விசாரணைக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக, கீதாலட்சுமி புதன்கிழமை காலை 10.58 மணிக்கு வந்தார். 7 மணி நேர விசாரணைக்கு பின்னர் மாலை 5.50 மணிக்கு அவர், அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
சரத், ராதிகாவிடம் விசாரணை: இதேபோல் ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.7 கோடி பெற்றுக் கொண்டு ஆதரவு அளித்ததாக எழுந்த புகார் குறித்து வருமானவரித் துறையினர் நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்காக மாலை 3.10 மணியளவில் இருவரும் வருமானவரித் துறை அலுவலகத்துக்கு வந்தனர். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஐந்தரை மணி நேரம் இருவரிடமும் விசாரணை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com