வாய் புண்ணால் பாதிக்கப்பட்டு கோவையை அடுத்த சாடிவயல் முகாமில் சிகிச்சை பெற்று வந்த யானைக் குட்டி குணமடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை வனப்பகுதியில் விடப்பட்டது.
கோவையை அடுத்த மாங்கரைப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைக் கூட்டம் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அருகிலுள்ள விளை நிலங்களை சேதப்படுத்தின. அந்தக் கூட்டத்திலிருந்த 5 வயது மதிக்கதக்க யானைக் குட்டி, யானைகளை விட்டு பிரிந்து அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் திரிந்து வந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அந்த யானை குட்டியைப் பிடிக்க வனத் துறையினர் முடிவு செய்தனர்.
அந்த யானையை பார்வையிட்டபோது அதன் வாய் பகுதியில் ஏற்பட்ட புண் காரணமாக, உணவு உட்கொள்வதற்கு சிரமப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த மார்ச் 14-ஆம் தேதி அந்த யானைக் குட்டியை பிடித்த வனத் துறையினர் கோவையை அடுத்த சாடிவயல் முகாமுக்கு கொண்டு சென்று வனத் துறை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் சிகிச்சையளித்து வந்தனர்.
தற்போது யானையின் வாய் புண் பூரணமாக குணமடைந்த நிலையில், அந்த யானையை காரமடை வனச் சரகத்தில் கொண்டுவிட வனத் துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து, சாடிவயல் பகுதியிலிருந்து லாரி மூலம் கொண்டு வரப்பட்ட அந்த யானை, காரமடை வனச்சரகத்துக்கு உள்பட்ட அத்திக்கடவு வனப் பகுதியில் விடப்பட்டது.