வருமான வரித்துறை விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் மீண்டும் வரும் 17-ஆம் தேதி ஆஜராகின்றனர்.
இது குறித்த விவரம்: ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள் உள்பட 55 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7, 8-ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.
இச்சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணமும் வருமான வரித்துறையிடம் சிக்கியது.
இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், கீதா லட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் கடந்த திங்கள்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை விசாரித்தனர். இதில் விஜயபாஸ்கரும், கீதாலட்சுமியும் விசாரணைக்கு ஒரு நாள் மட்டுமே ஆஜரானார்கள்.
சரத்குமாரிடம் நான்கு நாள்களும், சிட்லப்பாக்கம் ராஜேந்திரனிடம் இரு நாள்களும் வருமான வரித்துறையினர் விசாரணை செய்தனர். சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு நாள் விசாரித்தனர்.
இதனிடையே முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ள வருமான வரித்துறை, அடுத்த கட்ட விசாரணைக்குத் தயாராகி வருகிறது. இந்த விசாரணை வரும் 17-ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜயபாஸ்கரையும், கீதாலட்சுமியையும் ஆவணங்களுடன் அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கெனவே வருமான வரித்துறை அறிவுறுத்தியிருந்தது. இதனால் இவர்கள் இருவரும் 17-ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு ஆவணங்களுடன் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.