சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று கோடை வெயில் 106 பாரன்ஹீட்டை தொட்டது. ஒரே நாளில் திடீரென இன்று வெப்பம் அதிகரித்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் சித்திரை மாதம் பிறந்த பிறகு நேற்றும், இன்றும் கடுமையான வெயில் கொளுத்தியது.
சென்னையில் நேற்று 39.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் மிக அதிகமான வெப்பம் பதிவான நாட்களில் ஏப்ரல் 16 ஆன ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு முன்பு, கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி 40.8 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்த அளவுகளை எல்லாம் இன்றைய வெயில் தாண்டிவிட்டது. சென்னையின் ஒரு சில இடங்களில் 41.8 டிகிரி செல்சியஸ் (107 பாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால், பூமிப்பரப்பின் மீதிருந்த காற்றின் ஈரப்பதம் குறைந்து, வெப்பக் காற்று வீசியது. எனவே, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்களும் எச்சரிக்கை விடுத்திருந்தன.
சென்னையில் இன்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: தமிழகத்தில் 6 இடங்களில் சதம்: வெப்பம் மேலும் அதிகரிக்கும்
ஆனால், நேற்றை விட இன்று காலையிலேயே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அலுவலகம் செல்வோர் அனைவருமே இதனை காலையில் உணர்ந்திருப்பார்கள்.
இன்று சென்னையின் முக்கிய பகுதிகளில் 41.4 முதல் 41.8 டிகிரி அளவுக்கு வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய செய்தி: அந்தமானில் மேலடுக்கு சுழற்சி: வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு
படிக்க வேண்டிய செய்தி: கரூர் பரமத்தியில் 109 டிகிரி: 8 இடங்களில் வெயில் சதம்