சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்திற்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 1991-96 ஆண்டு ஆட்சிக்காலத்தில் கல்வித்துறை அமைச்சராக பணிபுரிந்தார்.அப்போதைய காலகட்டத்தில் தன் பெயரிலும், தன் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தான பாண்டியன், முருகன் அதியமான் ஆகியோர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடிக்கு சொத்துச் சேர்த்ததாக பின்னர் வந்த திமுக ஆட்சிக்காலத்தில் அவர் மீது ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்திற்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரங்கநாயகத்தின் மனைவி மற்றும் மகன்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இவர் தற்பொழுது அதிமுக ஓ.பி.எஸ் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.