மூன்று தமிழக அமைச்சர்கள் மீது புகார்: வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் வாக்குமூலம்!

வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதாக தமிழக அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு  மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் ...
மூன்று தமிழக அமைச்சர்கள் மீது புகார்: வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் வாக்குமூலம்!

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டியதாக தமிழக அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு  மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் வருமான வரித்துறை அதிகாரிகளின் வாக்குமூலம் பெறப்பட்டது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி.சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் மற்றும் விஜயபாஸ்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் ஆகியோர் வீடுகள் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7, 8-ஆம் தேதிகளில் சோதனை செய்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் இருவரும் அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் தில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரமும் வாக்குவாதம் செய்தார்.

அப்பொழுது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வருமான வரித்துறையின் பெண் அதிகாரியை அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதேபோல் நடிகர் சரத்குமார் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவர்கள் மீது தமிழக காவல்துறை ஆணையரிடம் வருமானவரித்துறை புலானய்வுத்துறை தலைவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில் தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன் கடம்பூர் ராஜு மற்றும் மேலிடப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகிய மூவர் மீதும் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆதாரங்களை அழித்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மயிலாப்பூரில் உள்ள துணை ஆணையர் பாலகிருஷ்ணன் அலுவலகத்தில் இதில் சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் வாக்குமூலம் அளித்தனர்.அவர்களது வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com