அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமியிடம் இன்று விசாரணை

அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் இன்று சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு
அமைச்சர் விஜயபாஸ்கர், கீதாலட்சுமியிடம் இன்று விசாரணை

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் இன்று சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். அப்போகுது அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிகளவு பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 35 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. இதில் பல முக்கிய ஆவணங்களும், ரூ.89 கோடி அளவிலான ரொக்கப்பணமும் சிக்கியது.

இதனையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. அவர்களும் கடந்த 10-ம் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஆனால், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி மட்டும் சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, அவரும் அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 12-ஆம் தேதியன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதனையேற்று அவர்கள் இருவரும் இன்று சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் மீண்டும் ஆஜராவார்கள் என தெரிகிறது.

இன்றைய விசாரணையின் போது முக்கிய தகவல்கள் வெளிவரவாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரியில் மத்திய பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குக்காக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த ஆவணம் விவகாரத்தில் சி.பி.ஐ. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய 4 விதமான விசாரணைகளை அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய உதவியாளர்களும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com