சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு அமைச்சர் தங்கமணி வருகை தந்துள்ளார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் தங்கமணி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியினர் மீண்டும் இணைவது குறித்து தற்போது பேச்சுவாத்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
இவர்களைத் தொடர்ந்து பழனிசாமி இல்லத்துக்கு தங்கமணியும் வருகை தந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பிறகு அமைச்சர்கள் டிடிவி தினகரனையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
சசிகலா அணி சார்பில், ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஓபிஎஸ் அணியினர், மீண்டும் வந்தால் அதை வரவேற்பதாக தினகரன் அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து பதில் அளித்த பன்னீர்செல்வம், அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்வது குறித்து இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. இரு அணிகள் இணைவது தொடர்பாக யாரும் அணுகினால் எங்கள் தரப்பில் எந்த நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதற்கிடையே இரட்டை இலைச் சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் கீழ், டிடிவி தினகரன் தில்லி போலிசாரால் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இன்று வழக்குரைஞர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.
டிடிவி தினகரன் வீட்டில், வழக்குரைஞர்கள் ஜீனசேனன், குமார் ஆகியோர் ஆலோசனைக்குப் பின் புறப்பட்டுச் சென்றனர்.